Monday 20 October 2008

இந்தியாவின் பிடியிலிருந்து நழுவியதா இலங்கை?

கருணாவை மிக சாதுரியமாகத் திட்டமிட்டு புலிகளிடமிருந்து இந்தியா பிரித்தெடுத்தது. அதன் முழு நோக்கம் கிழக்கை தன்வசமாக்குவதும் அங்கு பெரிய முதலீடுகளைச் செய்து தன் பிடிக்குள் இலங்கையை மெல்ல மெல்ல கொண்டு வருவதும்தான். இதை முன்கூட்டியே அறிந்த அமெரிக்கா தனது காய்களை மிகக் கபடமாக நகர்த்தியது. அதன் விளைவு பிள்ளையான் கருணாவைத் தூக்கி எறிந்து தான் கிழக்கின் முதல்வரானான். கிழக்குப் பிராந்திய வாதம் பெரிதும் பலவீனப் பட்டது. பிள்ளையானிடம் அமெரிக்க அரச தந்திரிகள் நெருங்கிப் பழகினர். யப்பானும் நெருங்கி வந்தது. இந்தியவின் கனவு தவிடு பொடியானது. மீண்டும் வந்த கருணா இந்திய ஆதரவு சக்தியாக உருவாவதைத் தடுக்க அவருக்கு பா.உ பதவி வழங்கப்பட்டது.

இந்தியா ஒரு கறிவேப்பிலை.
இந்தியா இலங்கைக்கு உதவி செய்யாவிடில் பாக்கிஸ்தானும் சீனாவும் உதவ தயராக இருக்கிறன என்பது பகிரங்க உண்மை. பாக்கிஸ்த்தானோ சீனாவோ இலங்கை வந்து ராடர் பொருத்தி இயக்கினால் அவற்றால் தென் இந்தியாவின் பெரும் பகுதிகளை உளவு பார்க்க முடியும். இதைத்தடுக்க இந்தியா தானே அதைச் செய்தே ஆக வேண்டும். இதற்கு கைமாறாக எதையும் இலங்கையிடம் இருந்து பெறமுடியாது. இந்தியாவை அனுமதித்ததே பெரும் காரியம். இதனால் இந்தியா இலங்கையின் தமிழின ஒழிப்புப்போருக்கு உதவிசெய்யவேண்டும். அதனால் இந்தியாவிற்கு எந்த பயனும் இல்லை. இங்கு இந்தியாவின் பேரம் பேசும் நிலை மிகப்பலவீனமானது. இப்படி ஒரு நிலை வேறு எந்த ஒரு நாட்டிற்கும் ஏற்படாத துர்ப்பாக்கிய நிலை. அண்மையில் ஒரு இந்தியப் பாதுகாப்பு அதிகாரி சொன்னார்: இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு ஆயுத உதவி வழ்ங்கியே ஆகவேண்டும் என்று. இந்நிலையில் இலங்கை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒரு குட்டை உடைத்தார். இந்தியாவையை இலங்கை கறிவேப்பிலை போல் பயன்படுத்துகிறது என்று. அதாவது தேவையான நேரம் பயன்படுத்தி தேவை இல்லாத நேரம் தூக்கி எறிந்து விடுதல்.
தமிழக எழுச்சி திட்டமிட்ட நாடகம்?
இந்தியா தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தவர்களுக்கு மருந்து அனுப்ப தடை செய்தது அண்மையில்தான். கருணாநிதி தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்க மறுத்த்தும் அண்மையில்தான். இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுத உதவிகளை நியாயப்படுத்தி விஜயகாந்த் பேசியதும் அண்மையில்தான். இன்று வன்னியில் மக்கள் படும் துயரை சில மாதங்களுக்கு முன் கிழக்கில் வாழ் தமிழரும் பட்டனர். அப்போது தமிழ்நாடு வாய் மூடியிருந்தது.
திடீரென ஒரு எழுச்சிதமிழ் நாட்டில் எழுந்ததின் பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தே ஆக வேண்டும். இந்த எழுச்சிக் கோரிக்கைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படவில்லை:1. தமிழருக்கு தனி ஈழ்ம்தான் ஒரே தீர்வு, 2. புலிகள் மீதான இந்தியத்தடை நீக்கம், 3. தமிழருக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்பன. இந்த மூன்றும் மத்திய அரசுக்குத் வேண்டாதன. மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நடக்கின்றன எல்லாம். ஆனால் தமிழீழத்திற்கு ஆதரவாக செயல் படும் தமிழின உணர்வாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். திருமாவளவன் ஒரு டிவீடி மூலம் கலைஞர் கருணாநிதியை கண்கலங்க வைத்தார். வைக்கோவும் இரமதாசுவும் தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று பகிரங்க அறிக்கை விடுத்தனர். இங்கு அரசியல் வாதிகள் அடக்கிவாசிக்க திரைப்படக் கலஞர்கள் ஒரு படி மேலே சென்று விட்டனர். இயக்குனர் சீமான்: கடல் தாண்டி வருவோம்.
இயக்குனர்/நடிகர் சேரன்: இலங்கைத் தமிழ்ர்க்கு உதவாவிடில் தமிழ்நாடு பிரியும் நிலை ஏற்படும்.
இந்தியா மீண்டும் தமிழரைப் பயன்படுத்தி இலங்கையை தன் பிடிக்குள் கொண்டுவர முயல்கிறது.
இலங்கையும் காய்களை நகர்த்துகிறது?
இந்தியா தமிழ்நாட்டைத்தூண்டி இலங்கையை மிரட்ட முயற்ச்சிக்க இலங்கையும் தனது பேரினவாதசக்திகளை இந்தியாவிற்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்க்கொள்ளுமாறு பணித்துள்ளது. ஆக இனிவரும் நாட்கள் சுவரசியம் நிறைந்தனவாக இருக்கப்போகிறது.

No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly